புதன், 30 செப்டம்பர், 2009

எவனோ ஒருவன் உங்களில் ஒருவனாய்.

இது எனது 100 வது இடுகை. பரந்து விரிந்த இந்த வலையுலகில் நான் படித்தவை ஏராளம். பல நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர். நான் வலைப்பதிவுக்கு வந்த புதிதில் எனக்கு வலைப்பதிவு தொடர்பில் எந்த அறிவும் கிடையாது. படிப்படியாக பல விடயங்களைக் கற்றுக் கொண்டேன்


ஆரம்பத்தில் நான் சில வலைப்பதிவுகளை பார்ப்பதோடு மட்டும் நின்றுவிட்டேன். நாமும் வலைப்பதிவு உருவாக்கலாம் என்ற விடயம் தெரியாததுதான் காரணம். வீட்டில் இனைய இணைப்பு இருந்தும் சில இணையத்தளங்களைப் பார்ப்பது இணையத்திலே அரட்டை அடிப்பது என்று பொழுது போய்க்கொண்டிருந்தது.


அந்தக் காலகட்டத்தில் நண்பர் பிரபா ஒரு வலைப்பதிவை ஆரம்பித்திருந்தார். அப்போது அவர் வலைப்பதிவு ஆரம்பிப்பது தொடர்பாக பல விடயங்களைச் சொன்னதோடு உச்சாகமும் ஊட்டினார். அவருக்கு இந்த வேளையில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


அப்போது நான் அடிக்கடி இன்று பதிவிடுவதுபோல் பதிவிட்டாலும். திரட்டிகளில் இணைத்துக் கொள்வது, பின்னூட்டமிடுவது தொடர்பான விடயங்கள் தெரியாததால் பதிவிடுவதொடு மட்டும் நின்றுவிட்டேன். பின்னூட்டம் கூட இடுவதில்லை. காலப்போக்கில்தான் இவைகளை அறிந்து கொண்டேன். (பல மாதங்களின்பின்


எனது முதலாவது பதிவு நம்பிக்கை எனும் தலைப்பிலே நம்பிக்கை பற்றி எழுதி இருந்தேன். அதற்கு முதலாவது பின்னுட்டத்தை நண்பர் பிரபாவே இட்டிருந்தார். தொடர்ந்து இரண்டு மூன்று இடுகையின்பின் நண்பி சிந்து இரண்டாவது பின்னூட்டத்தை இட்டதோடு எனது அனைத்து இடுகைகளுக்கும் பின்னூட்டமிட்டு உச்சாகப் படுத்தினர். அப்போது சக்கரை சுரேஷ் கலை, சசி (இருவரும் இன்று பதிவிடுவது குறைவு ஏனோ தெரியவில்லை) மற்றும் பிரிவையும் நேசிக்கும் காயத்திரியும் தொடர்ந்து பின்னூட்டமிட்டு உச்சாகப்படுத்தினர். நான் பதிவிடுவதோடு நின்றுவிட்டேன் பினூட்டமிடுவதுமில்லை திரட்டிகளில் இணைப்பதுமில்லை.


பின்னூட்டமிடுதல் மற்று திரட்டிகளில் இணைப்பது தொடர்பாக அறிந்து செயலில் இறங்கியபோது பல நண்பர்கள் கிடைத்தார்கள். எனது வலைப்பதிவும் தொலைந்தது. இன்று புதிய வலைப்பதிவில் பதிவிடுகி்றேன். நான் ஆரம்ப காலங்களில் லோஷன் அண்ணாவின் வலைப்பதிவை ஒரு தடவை அல்ல பல தடவைகள் ஒரு இடுகையை வாசிப்பேன். எப்படி எழுதப்பட்டிருக்கின்றது என்ற நுணுக்கங்களை அறிவதற்காக. அத்தோடு எவருக்குமே பின்னூட்டமிடுவதில்லை என் கருத்துக்கள் தவறானவைகளாக அமையுமோ என்ற எண்ணத்தில்.


எனது பதிவிலே சில இடுகைகள் விவாதங்களாக இடம் பெறுகின்றன. நான் மொக்கைப்பதிவுகளை முடிந்தவரை இடுகையிடுவதில்லை. அதேபோல் இதுவரை சினிமா, விழையாட்டுப்பதிவுகள் இடுகையிடவில்லை. தெரியாது என்றல்ல இனிவரும் காலங்களில் எதிர் பார்க்கலாம்.


எனக்கு கிடைக்கும் வாக்குகள் பின்னூட்டங்கள் மூலம் சந்தோசமடையும் நான் அண்மையில் எனது ஒரு இடுகையினால் கடும் கவலை அடைந்தேன். திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப் பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி? எனும் இடுகையினை வெளியிட்டுவிட்டு மறுகணமே ஏன் வெளியிட்டேன் என்று கவலைப்பட்டதுண்டு. எனக்கு வழமையாக பினூட்டமிடுபவர்கள் பின்னூட்டமிடவில்லை பின்னூட்டமிட்டாலும் இது என் பதிவா என்று கேட்டே பின்னூட்டமிட்டனர். நான் அதனை ஒரு நகைச் சுவைப் பதிவாகவே இட்டிருந்தேன். அந்த இடுகைக்கான பார்வையாளர்களின் வருகைதான் எனது வலைப்பதிவுக்கு அதிகமாகக் கிடைத்த வருகை என்பது வேறு விடயம். (அந்த இடுகையினை நீக்கி விடுவோம் என்றுகூட நினைத்ததுண்டு)


அனானிகளால் பல தகாத வார்த்தைகளால் தாக்கப்பட்டிருக்கிறேன். அத்தோடு விரட்டப்பட்டுகூட இருக்கிறேன். இவைகள் என் எழுத்துக்களின் வேகத்தை அதிகரித்ததே தவிர குறைக்கவில்லை.


இன்று உலகெங்கும் நல்ல பல நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்கள். எனது ஆக்கங்களுக்கு ஒரு அங்கிகாரம் கிடைக்கின்றன என்று நினைக்கும்போது சந்தோசமடைகின்றேன். என் குடும்ப சுழலில் தனிமையை உணர்ந்த நான் எனது தனிமையினை இந்த வலையுலகம் நீக்கியிருப்பதாக உணர்கிறேன்.


இன்று சில பிரபல இணையத் தளங்களிலே எனது ஆக்கங்கள் முதல் பக்கத்திலேயே பிரசுரிக்கப்பட்டு எனது வலைப்பதிவுக்கு தொடுப்பு வழங்கப்பட்டிருக்கும்போது. மிகவும் சந்தோசப்படுகிறேன். எனது தமிழ் மொழி தொடர்பான இடுகைகள் சில தமிழ் மொழி தொடர்பான இணையத் தளங்களிலே இன்றும் முதல் பக்கத்திலே பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களுக்கும் எனது நன்றிகள்.


அண்மையில் நான் தமிழுயிர் எனும் வலைப்பதிவுக்குச் சென்றேன் அங்கே என் பதிவுகள் தமிழுயிர் தெரிவுகள் எனும் தலைப்பிலே தொடுப்பு வழங்கப்படிருப்பதை அறிந்து ஆச்சரியமடைந்தேன். தமிழுயிர் வலைப்பதிவுக்கும் எனது நன்றிகள். பல நண்பர்கள் எனது வலைப்பதிவுக்கு தொடுப்பு வழங்கி இருக்கின்றனர். தமிழுயிர் என்பது எனது தமிழ் மொழி தொடர்பான ஆக்கங்களுக்கு தொடுப்பு வழங்கியிருக்கின்றது.


எனக்கு வலைப்பதிவு மூலமாக பல துறை சார்ந்த நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக தமிழ் மொழியோடும், தமிழ் இலக்கியத்தோடும் அதிக பற்றுக்கொண்ட எனக்கு தமிழ் இலக்கியத்துறை சார்ந்த பல நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்கள். அவர்கள் எனக்கு தங்கள் கருத்துக்கள் மூலம் உச்சாகத்தினை வழங்கி வருகின்றனர். அதிலே நண்பர்கள் முனைவர். இரா. குணசீலன், சுப. நற்குணம் மற்றும் முனைவர் சி.கல்பனா ஆகியோர் பின்னூட்டமிடுவது மாத்திரமல்லாமல் என்னை உச்சாகப் படுத்தியும் வருகின்றனர். அவர்களுக்கும் நன்றிகள்.


லோஷன் அண்ணாவைப் பொறுத்தவரை என்னை மட்டுமல்ல திறமை எங்கே இருக்கின்றதோ அவர்களை பாராட்டி உசசாகப்படுத்தாமல் விடமாட்டார். ஆரம்ப காலங்களில் அவரது பினூட்டமொன்று கிடைக்காதா என்று பல எதிர்பார்ப்புக்களோடு இருந்திருக்கின்றேன். இன்று எனது இடுகைகளை பாராட்டி பின்னூட்டமிடுவதோடு அவர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பும்போது அன்பு தம்பி என்று என்னை விழிக்கும் போது மட்டற்ற மகிழ்வடைகிறேன். (அறிவிப்புத்துறையில் அவரது குரல்களால் ஈர்க்கப்பட்டவன் என்பது வேறு விடயம்) லோஷன் அண்ணாவுக்கும் எனது நன்றிகள்.


எனக்கு அண்மையில் கிடைத்த நண்பரானாலும் அனானிகளால் தாக்கப்படும் நண்பர் சதீஸ் நல்ல நண்பராக தொடர்கின்றார்.

சில நண்பர்கள் எனது அத்தனை இடுகைகளுக்கும் பின்னுட்டமிட்டு உச்சாகப்படுத்தி வருகின்றனர் அவர்களிலே வால்பையன் என்னோடு சில விடயங்களிலே முரண்பட்டாலும் என்னோடு நல்ல நண்பர் எல்லோரையும் உச்சாகப்படுத்தும் ஒருவர். மற்றும் நாட்புடன் ஜமால், ஹேமா, மேனகா சத்தியா,ஞானசேகரன், பிரியமுடன் வசந்த், நிலாமதி, சுசி , காயத்திரி, சக்கரை சுரேஷ்,சத்தியா, தமிழரசி, ஜெகநாதன், ஸ்டார்ஜன், அக்பர், குறை ஒன்றுமில்லை ராஜ் என்று பல வெளிநாட்டு நண்பர்கள் என் எழுத்துக்களுக்கு உறமுஉட்டி வருகின்றனர். (பல நண்பர்கள் இருக்கின்றனர் பெயர் குறிப்பிடாத நண்பர்கள் மன்னிக்கவும்


கானா பிரபா அண்ணா மற்றும் டொன்லி போன்றோர் அடிக்கடி வந்து என்னை உச்சாகப்படுத்டுவோர் அவர்களுக்கும் நன்றிகள்.


இலங்கை நண்பர்கள் எனும்போது சுபாங்கன். சப்ராஸ், யாழினி போன்றோர் அன்றுமுதல் இன்றுவரை உச்சாகப்படுத்திவருகின்றனர் அவர்களுக்கும் நன்றிகள்.


இலங்கைப் பதிவர் சந்திப்பின்பின் பல நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர். நான் சந்திப்பில் கலந்துகொள்ளமுடியவில்லை என்றாலும் பல நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர். குறிப்பாக புல்லட்,ஆதிரை, வந்தி, யோகா ஆகியோர் நல்ல நண்பர்களாக இருப்பதோடு எமது நட்பு தொடர்கின்றது. இவர்களோடு கோபி, மருதமூரான், இலங்கன். வேந்தன், அமுதன், மாயா, தங்க முகுந்தன், சுபானு என்று ஒரு கூட்டமே இருக்கிறது.
இன்னும் பல நல்ல ஆக்கங்களோடு உங்களை சந்திப்பேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது. உங்கள் ஆதரவு என்னை உச்சாகப்படுத்தட்டும்.
read more...

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

உன் காதலுக்காய் பகவானாகிறேன்

திரும்பும் திசை
எங்கும் கொடுமைகள்
என்றிருந்தேன் - அந்த
கொடுமைகளை
மறக்கச் செய்தவள் நீ....


உன் ஒரு வார்த்தைக்காய்
தவமிருந்தேன் பலகாலம்
அந்த வார்த்தைகளால்
கட்டப்பட்ட கற்பனைக்
கோட்டை - இன்று
உன் ஒரு வார்த்தையால்
தகர்க்கப்பட்டன....


என் கனவுகளுக்கும்
கற்பனைகளுக்கும்
சிறகு தந்தவள் நீ - அன்று
என் கண் கலங்கினாலே
கண்ணீர் விட்டவள் நீ - இன்று
என் கண்ணீருக்கே
காரணமானாய்...


அன்று நீ என்னோடு
பழகிய நாட்களை
திரும்பிப் பார்க்கிறேன்
நினைவுகள் கண்ணீராக
பல கதைகள் சொல்கின்றன....


அன்று கதை கதையாய்
சொன்னவள் நீ - இன்று
என் கதையையே
முடிக்க நினைப்பது
நியாயமா?


நான் பணமில்லாதவன்
என்பதால் இன்று
உன்னால் தூக்கி
வீசப்பட்டபோது
சும்மா பகவானிடம்
சென்றேன் வரம் பெற.....
சும்மா பகவானோ
என்னிடம் சும்மா
வரவேண்டாம்
பணமிருந்தால் வா
என்று சொல்லிவிட்டார்...


பகவானே பணம்
கேட்கும்போது - நீ
பணம் கேட்பதில்
தவறில்லை என்னிடம்
பணமில்லை என்பதுதான்
தப்பு....


நாளை நானும் பகவானாகி
பணம் உழைத்துவிட்டு
மீண்டும் உன்னோடு
வருகின்றேன் - என்னிடம்
இருக்கும் பணத்துக்காய்
என்னை அரவணைப்பாய்
என்ற நம்பிக்கையில்....
read more...

திங்கள், 28 செப்டம்பர், 2009

மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்துகின்றார்களா?

நான் 100% கடவுள் நம்பிக்கையும், கடவுள் மீது அளவற்ற நம்பிக்கையும் கொண்டவன். இன்று எமது இந்து மதம் போகிற போக்கைப் பார்த்தால் மதமும் மண்ணாங்கட்டியும்..என்று லோஷன் அண்ணா சொல்வது சரிதானோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
எமது இந்து மதம் ஆதியும் அந்தமும் இல்லாத ஒன்று, இறைவன் ஒருவனே அவனை பல அவதாரங்களிலே காண்கின்றோம் என்றெல்லாம் சொல்கின்றோம். இது முற்றிலும் உண்மையே.

எமது இந்துக்கள் ஆதியும் அந்தமும் இல்லாத கடவுளை வணங்குகின்றோம். எமது இந்துக்களிடையே இப்போது மனிதர்களாகப் பிறந்தவர்களை வணங்குகின்ற ஒரு நாகரிகம் பரவிவருகின்றது. இது சரியா? மனிதர்களை வணங்குபவர்களை ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனை வணங்கும் நாம் எப்படி இந்துக்களாக ஏற்றுக்கொள்ள முடியும்.

இந்த இடுகை இடுவதற்கு காரணம் நண்பர் கனககோபியின் மதத் திணிப்புகள் கெளரவமான வடிவில்... எனும் இடுகையும் வந்தியின் வேட்டைக்காரன், அம்மா பகவான் சில எதிர்வினைகள். எனும் இடுகையும் காரணமாக இருந்தாலும் எனது நண்பர்களோடு நான் அடிக்கடி சண்டை செய்கின்ற விடயமே இந்த அம்மா பகவானை வணங்குதல் விடயம்.

அம்மா பகவான் மட்டுமல்ல இன்று இந்துக்களிடையே பல மனிதர்களை கடவுளாய் சித்தரித்து வணங்குகின்ற ஒரு நோய் பரவிவருவதோடு அவர்களுக்குள்ளே போட்டி அதிகரித்துவிட்டது. இன்று எத்தனை அமைப்புக்கள் தங்கள் தங்கள் பாட்டிலே பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இன்று எமது ஆதியும் அந்தமும் இல்லாத கடவுளர்களை முக்கியத்துவப்படுத்துவதைவிட மனிதர்களாகப் பிறந்தவர்களை முக்கியத்துவப்படுத்துகின்றனர்.

இவர்கள் தங்களைப் பிரபல்யப்படுத்துவதட்காக சில பிரச்சாரங்களில் ஈடுபடும்போது அது இந்து சமயக் கோட்பாடுகளிலிருந்து வேறுபடுகின்றன. அத்தோடு இப்படியான மனிதக் கடவுளர்களின் தோற்றத்தால் கடவுள் மீது இருக்கின்ற நம்பிக்கையினை மக்கள் இழக்கின்றனர்.

இந்துக்களாகிய நாம் ஏன் மனிதர்களை வணங்கவேண்டும்? தெய்வமாகப் போற்றவேண்டும்? இங்கே வணங்கப்படுகின்றவர்கள் என்ன செய்தார்கள்? ஏன் கடவுளை வைத்து பிழைப்பு நடத்துகின்றீர்கள்? இன்று பல தியாகங்களைச் செய்தவர்கள் இருக்கின்றனர். அவர்களையும் வணங்கலாமல்லவா? இன்று நாம் அப்படி வணங்கப்போனால் பல ஆயிரம் மனிதக் கடவுளர்கள் உருவாகலாமல்லவா?

கனககோபியின் பதிவிலே அனானி இட்ட பின்னூட்டங்களில் ஒன்று கீழே


//பெயரில்லா சொன்னது…


உமது கருத்து ஒரு வட்டம் அதாவது அம்மாபகவான் மீது குறை கூறுவதாக மட்டும் தான் இருக்கிறது தற்பொழுது அம்மாபகவான் கல்கி அவதாரம் என்றுதான் பக்தர்கள் வணங்குகிறார்கள். சாய்பாபா கிருஷ்ண அவதாரம் என்று சொல்லுராங்க.சாய் பாபா பற்றிய இன் வீடியோ ஆதாரம் என்னிடம் உண்டு வேண்டுமென்றால் அனுபிறேன். ஆதாரம் இல்லாமல் பேசப்பிடாது..நான் பாடசாலை படித்த காலத்தில் செவ்வாய் தோறும் பாபா பஜனை நடக்கும்.இது வற்புறுத்தல் இல்லையா. தம்பி பாபாவை விட தற்பொழுது அம்மா பகவனை வணங்குவோர் அதிகம்
//

இந்த பின்னூட்டம் மூலம் பல விடயங்களை அறிய முடிகின்றதல்லவா. மனிதர்களை வணங்குவோரின் போட்டி எப்படி இருக்கின்றது என்று. ஒரு பகவானை வணங்குவோர் இன்னொரு பகவானை ஆதார பூர்வமாக வீடியோ மூலம் பிடித்துக்கொடுக்க நினைக்கின்றார்.

அடுத்து இங்கே அவதாரம் பற்றிச் சொல்கின்றார். இது இந்த மனிதர்களை இறைவனாக போற்றுகின்றவர்கள் மக்களை தன பக்கம் இழுப்பதற்கு புனையப்பட்ட கட்டுக்கதைகளே. அப்படியானால் நானும் ஒரு கடவுளின் அவதாரம் என்று சொல்லலாமா?

இன்று பலர் அம்மா பகவானை வணங்குவதாக குறிப்பிடுகின்றார். இன்று தங்களை கடவுளாக மக்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக அவர்களால் பயன் படுத்தப்பட்ட மந்திர தந்திரங்களும் போலி நாடகங்களும் பிரச்சாரங்களுமே மக்கள் உண்மையான கடவுள் மீது இருக்கும் நாட்டத்தைவிட்டு போலி கடவுளர்களை தேடிப்போவது.

ஏன் நாம் இவர்களை வணங்கவேண்டும்? உண்மையான சிவபெருமான் போன்ற கடவுளர்களைவிட இவர்கள் என்ன செய்திருக்கின்றார்கள்? இந்துக்கள் என்போர் யார்? இவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்?

கடவுளை வைத்து பிழைப்பு நடத்துவோர் பலர் அவர்களை உண்மையான இந்து ஒரு போதும் நம்பி ஏமாற மாட்டான். கடவுளின் பெயரால் பிழைப்பு நடத்த நினைப்பவன் என்றுமே இந்து மதத்துக்கு துரோகம் செய்து கொண்டே இருப்பான்.

இதனையும் பாருங்கள். எனது முன்னைய இடுகை
read more...

நானும் அரசியலுக்கு வரப்போகின்றேன்.

இன்று இலங்கையில் யுத்தம் ஓய்ந்திருக்கின்றது. நாட்டை அபிவிருத்தி செய்கின்றோம் என்று பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்.

தமிழ் மக்கள் பல காலமாக பல்வேறு இன்னல்களை எதிர் நோக்கி வருவருகின்றனர் அது நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. இன்று அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிப் பேசுகின்றவர்கள். தமிழ் மக்கள் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சனைகள் பற்றி ஏன் பேசாமல் இருக்கின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை.


கடந்த காலத்திலேயே இடம் பெற்ற யுத்தத்தின் காரணமாக எமது சிறுவர்கள் பலர் தாய், தந்தையர்களை இழந்து சிறுவர் இல்லங்களிலே சொந்தங்கள், நிம்மதி, மற்றும் அத்தனையையும் இழந்து. பல கஸ்ரங்களுக்கு மத்தியிலே வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் எதிர் காலம் பற்றி சிந்திக்கின்றார்களா?


இன்று ஊருக்கு ஒன்று என்று சொல்லுமளவுக்கு சிறுவர் இல்லங்கள் இருக்கின்றன. இங்கே இருக்கின்ற சொந்தங்களை இழந்த பெண் பிள்ளைகளின் எதிர் காலம் தொடர்பில் மட்டுமாவது சிந்திக்கின்றார்களா? அந்த பெண் பிள்ளைகளின் எதிர் காலம்தான் என்ன?. அவர்களின் எதிர் காலம் தொடர்பில் நாம் அனைவரும் சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம். எமது எதிர்கால சந்ததியினர் பாதிக்கப்படுவது எமது தமிழினத்தின் பாரிய வீழ்ச்சியல்லவா? நாளை தமிழினத்தின் சரித்திரம் படைக்கவேன்டியவர்கள் அனாதைகளாக்கப்பட விடுவதா?


இன்று பலர் அரசியல் இலாபம் தேட நினைக்கின்றனர். பலர் அரசியலிலே ஈடுபடும் நோக்கோடு இந்த அபிவிருத்தித் திட்டங்களிலே பங்கெடுக்கின்றனர். எதிர்காலத்திலே புதிதாக பலர் அரசியலிலே குதிக்க திட்டமிட்டுள்ளதை அறிய முடிகின்றது. அரசியல் எதிர்காலம் தேடும் புதியவர்களாவது எமது சொந்தங்களை இழந்து சிறுவர் இல்லங்களிலே தவிக்கும் சிறுவர்கள் தொடர்பில் நல்ல திட்டங்களை முன்னெடுப்பார்களா?


இருக்கின்ற தமிழ் அரசியல்வாதிகள் மீது எந்த நம்பிக்கையும் அற்றவனாகவே இருக்கின்றேன். எனக்கு சிறு வயதிலே இருந்த இருந்த ஆசைகள் இரண்டு. ஒரு அறிவிப்பாளனாக வரவேண்டும், ஒரு அரசியல்வாதியாக வரவேண்டும். (காரணம் பல கஸ்ரங்களுக்கு மத்தியிலே வாழ்ந்தவன் என்பதனால் ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கம்)



சிறு வயதிலே அரசியல் கட்சிகளின் பின்னாலும் ஈடுபட ஆரம்பித்தேன். என் அரசியல் பேச்சிலே எதிர்த்து வாக்களிக்க இருப்போரும் தங்களுக்கு வாக்களித்து விடுவார்கள் என்று சில அரசியல்வாதிகளே சொல்லி இருக்கின்றனர். தேர்தல் வந்தால் என்னை யார் பிரச்சாரத்துக்கு பிடிப்பது என்ற போட்டி வேறு.


இன்றுதான் நான் யோசிக்கின்றேன் நான் எந்தளவுக்கு தவறு செய்திருக்கின்றேனென்று. இப்படிப்பட்டவர்களுக்கா உதவி செய்தேன் என்று. இன்று உணர்கின்றேன் அரசியல் என்பது என்ன என்று. எப்படி நல்லவர்களாக இருந்தவர்கள் இன்று எப்படி இருக்கின்றார்கள். இன்று யோசிக்கின்றேன் அன்று மக்களுக்காக வாழ்ந்தவர்களா இன்று மக்களுக்காக அரசியலுக்கு வந்து மக்களை சுரண்டி வாழ்கின்றார்கள். என்னால் நம்பமுடியவில்லை.


இன்று அரசியல் எதிர்காலம் தேடுவோர் இவர்கள்போலல்லாமல், இவர்கள்வளி செல்லாமல் நம் எதிர்கால சந்ததி தொடர்பில் நல்ல திட்டங்களை முன்னெடுப்பார்களா?

என்னடா இவன் திடிரென அரசியல் பேசுகின்றான் என்று நினைக்கின்றீர்களா. அரசியல் எதிர்காலம் தேடும் சிலர் அவர்களின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு எனது உதவி தேவைப்படுவதாக சொன்னார்கள். அவர்களில் சிலரிடம் நான் நேரடியாக சொன்னேன் நீங்கள் அரசியலில் இறங்கினால் நான் உங்களுக்கு எதிராக இறங்குவேன் என்று.


சிறு வயதில் ஏன் இந்த அரசியல் சாக்கடை பற்றி யோசித்தேன் என்று இப்போது கவலைப் படுகின்றேன். கஷ்டப்படும் மக்களின் வயிற்றிலடித்து பிழைப்பு நடத்துபவன் மனிதனா?
read more...

ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

கேதார கௌரி விரதத்தின் மகிமை கூறும் பாடல்களை பதிவிறக்கிக்கொள்ளலாம்.

சிறப்பு வாய்ந்த விரதங்களில் ஒன்றான கேதார கெளரி விரதம் நாளை ஆரம்பிக்கின்றது. அதனால் என்னால் முன்னர் இடுகையிட்ட இடுகையினை மீண்டும் இடுகையிடுகின்றேன்.

கேதார கெளரி விரதக்கதையினையும், கேதார கௌரி விரதத்தின் மகிமையினையும் கூறும் பல பாடல்களை இலங்கைக் கலைஞர்களைக் கொண்டு ஒரு இறுவட்டாக வெளியிட்டிருந்தேன். அந்தப்பாடல்களை எல்லோரும் பதிவிறக்கிக் கொள்ள முடியும்.

பாடல் வரிகள் - கலாபூசனம் ஆறுமுகம் அரசரெத்தினம்
இசை - மட்டுநகர் ஜனனி
பாடியவர்கள் - மா.பாக்கியராஜா, வே.ஜனனி, சித்தீசன்


இந்துக்களின் விரதங்களிலே சிறப்பான இடத்தினைப் பெறும் விரதங்களில் ஒன்றான கேதார கெளரி விரதத்தின் மகிமையினை கூறும் இறுவட்டு ஒன்றினை எமது கலைஞர்களின் பங்களிப்போடு வெளியிட்டு இருந்தேன்.பாடல்கள் நல்ல வரவேற்பினைப் பெற்றிருந்தன. அப்பாடல்கள் நீங்களும் தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும்

கதைச் சுருக்கம்


திருக்கைலாச மலையிலே பரமசிவன், பார்வதி சமேதராக வீற்றிருந்த வேளையிலே. தேவர்களும், முனிவர்களும் அங்கு சென்று இருவரையும் சுற்றி வந்து வணங்கினர். அந்த வேளையிலே அங்கு வந்த பிரிங்கி முனிவர விகடக் கூத்தொன்றை ஆடி அங்கிருந்தவர்களை மகிழ்ச்சி அடையச் செய்த பின்னர். உமாதேவியை விலக்கி விட்டு சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வணங்கினர். உமாதேவியை அலட்சியம் செய்த முனிவரின் உடலிலிருந்த சக்தியை உமாதேவி எடுத்துக் கொண்டதனால் பிரிங்கி முனிவர் சபையிலே சோர்ந்து வீழ்ந்தார்.சிவபெருமான் பிருங்கி முனிவரிடம் தடி ஒன்றைக் கொடுத்து அதனை ஊன்று கோலாகக் கொண்டு நடந்து செல்வதற்கு அனுக்கிரகம் செய்தார். இதனால் ஆத்திரமும் அவதானமும் அடைந்த உமாதேவி சிவபெருமானிடம் கோபித்துக் கொண்டு பூவுலகுக்கு வந்தார்.ஒரு வில்வ மரத்தடியில் உமாதேவி வீற்றிருந்தார். உமாதேவியின் வருகையால் அந்த வனம் புதுப்பொலிவு பெற்றது. அந்த வனத்திலே வசித்த கௌதம முனிவர் திடிரென ஏற்பட்ட மாற்றத்துக்கான மாற்றத்துக்கான காரணத்தை அறிய முற்பட்டபோது. உமாதேவியைக் கண்டு நடந்த சங்கதிகளை அறிந்து கொண்டார்.புரட்டாதி மாதம் சுக்கில பட்ச தசமி தொடக்கி இப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் தீபாவளி அமாவாசை வரையுள்ள கேதரேசுரர் விரத மகிமை பற்றியும் அதனை அனுஷ்டிக்கும் முறைமை பற்றியும் விளக்கமாகக் கூற அம்மை விரதம் நோற்று அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகினார்.

பதிவிறக்கங்கள்...


read more...

சனி, 19 செப்டம்பர், 2009

திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப் பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி?

நம்ம பதிவுலக நண்பர் புல்லட் அண்மையில திடிரெண்டாப்போல் வாழ்க்கையும் வெறுமையும் - கொஞ்சம் சீரியசாய் எனும் ஒரு பதிவைப்போட்டு விட்டார். எல்லோரையும் சிரிக்க வைக்கிறவரே இவருக்கு என்ன நடந்ததெண்டு எல்லோருக்குமே ஒரே குழப்பம். எல்லோரும் அவருக்கு ஆறுதல் சொன்னதோடு ஆறுதல் சொல்லி பலர் பதிவிட்டும் விட்டனர்.


இப்பதான் புரியிறது அந்தப்பதிவு எதக்காகப்போடப்பட்டதெண்டு ஒன்றுமில்லை நம்ம புல்லட்டுக்கு கல்யாண ஆசை வந்துவிட்டது. (அவருக்கு இரண்டு தசாப்தங்களுக்குமுன் கல்யாண ஆசை வந்திருக்கவேண்டும் என்ன செய்வது தள்ளாடும் வயசில கல்யாண ஆசை வந்துவிட்டது.)


திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப்பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி? ;-)
{நமக்கெல்லாம் நாலு நாளைக்கொருக்கா வோல் பேப்பர மாத்தணும்.. இந்த வள்ளலில கலியாணம் சரிப்பட்டு வருமா? பீக் கொஸ்யன்க்கு ஆன்சர் தேடிட்டிருக்கோம்


என்று சொன்னதோடு அவருக்கு ஒரு நல்ல தீர்வு தரும்படியும் கேட்டிருந்தார்.


இதற்கான தீர்வினைச் சொல்லும்படி கேட்டிருந்தார் . நண்பருக்கு உதவி செய்ய வேண்டுமே என்ற நோக்கோடு உடனடியாக நம்ம சங்கத்தக்கூட்டி (என்ன சங்கமென்று கேட்காதிங்க சங்கத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை) உடனடியாக ஆராய்ந்து அவரது பிரச்சனைக்கான தீர்வுகள் ஆராயப்பட்டன.

திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப்பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி ?


எங்களது சங்கத்தால் அவருக்குக் கொடுக்கப்படும் ஆலோசனைகள் இதோ...


1. மனைவியை அடிக்கடி அழகுக்கலை நிலையத்துக்கு அனுப்பவேண்டும்.


2. மனைவி பாட்டியானாலும் நாகரிக ஆடைகளை எப்பொழுதும் அணியவேண்டும். உதாரணமாக தொடை மற்றும் ஏனைய கண்ணுக்குகுளிர்ச்சியைத் தரக்கூடிய, உடற்பாகங்களை வேளிக்காட்டக்கூடிய ஆடைகளை அணிய வேண்டும்.


3. நீங்கள் அதிகம் விரும்பி ரசிக்கின்ற நடிகை நடித்து புதிதாக வெளிவருகின்ற படங்களிலே அந்த நடிகை எப்படி கவர்ச்சி காட்டி நடித்திருக்கின்றாரோ அதேபோல் உங்கள் மனைவியையும் கவர்ச்சியாக உடை மற்றும் ஏனைய நாகரிகச் செயற்பாடுகளிலும் ஈடுபடச் செய்தல்.


4. அடிக்கடி உங்கள் கணனிக்கு மாற்றுகின்ற வோல் பேபர்களில் அந்த நடிகைகள் எப்படி இருக்கிறார்களோ அதேபோல் உங்கள் மனைவியையும் போட்டோ எடுத்து உங்கள் கணனிக்கு இந்த போட்டோக்களை மாற்றிக்கொள்ளலாம்.

5. பாட்டிமாரை (அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களை) நண்பிகளாக வைத்துக்கொள்வதோடு அடிக்கடி அவர்களைச் சந்தித்து பல மணி நேரம் பொழுதைக்கழிக்க வேண்டும். (எந்த ஒரு இளம் நண்பிகளும் இருக்கக்கூடாது.)

6. தன்னைவிட இருபது வயது குறைந்த பெண்ணை திருமனை செய்யலாம்.(மனைவியை நீங்கள் எப்போதும் பார்த்துக்கொண்டு இருக்கலாம் மனைவி உங்களைவிட வேறு ஒருவரைப் பார்த்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல)

7. நடிகைகளைப்பற்றி பேசுகின்ற லோஷன் போன்றோரின் அல்லது நடிகைகளின் அந்தமாதிரிப்படங்களின் களஞ்சியமாக இருக்கின்ற வந்தி போன்றோரின் வலைப்பதிவுகளுக்கு போவதைத் தவிர்த்து சந்ரு போன்றோரின் நல்ல வலைப்பதிவுகளுக்கு அடிக்கடி போய் வரலாம்.

8. தினமும் பின்னேரங்களில் ஆதிரை போன்றோருடன் பெண்கள் அதிகமாக நடமாடும் Majestic City , போன்ற இடங்களுக்கு சென்று பெண்களோடு சேட்டை செய்வதனைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். வேண்டுமானால் முதியோர் இல்லங்களுக்குப் போய் வரலாம்.

9. உங்கள் அலுவலகத்தில் இளம் பெண்கள் ஆண்களைப்போல் ஆடை அணியவேண்டும்என்ற கொள்கையினைக்கொண்டு வரலாம். (இதன் மூலம் பெண்களை பார்ப்பதனால் உங்களுக்கு வரும் பெண்கள் மீதான மோகத்தினைத் தவிர்த்துக் கொள்ளலாம்.)

10. மனைவிமீது வெறுப்பு வரும்போது வேறொரு மனைவியை மாற்றிக்கொள்ளலாம். (இதனால் மனைவிமீது வெறுப்பின்றி புது மனைவியோடு சந்தோசமாக இருக்கலாம் இங்கு எத்தனை மனைவி என்பது முக்கியமானதல்ல மனைவியோடு சந்தோசமாக இருப்பதே முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது.)

இதனைக் கடைப்பிடித்தால் பெண்கள் மீதான உங்கள் மோகம் குறைவடைந்து உங்கள் மனைவிமீது அதிகம் அன்பு, ஆசை வரும்.

இது போன்ற ஆலோசனைகள் தேவைப்படுவோர் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.
read more...

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

இதுவும் பெண்ணடிமைத் தனமல்லவா?

நீண்ட நாட்களாக எனக்குள்ளே நான் கேட்ட கேள்விகளை இன்று உங்களிடம் கேட்கின்றேன். வலையுலக நண்பி சிந்து தனது பதிவிலே பெண்கள் ஆண்களுடன் கதைப்பது தவறா? என்று கேட்டிருக்கின்றார். இதுவே என் கேள்வியும் சிந்துவின் பதிவிலே சிந்துவின் கேள்விக்கான பதில் கிடைக்கவில்லை.

இன்று இந்த நாக உலகிலே நாகரிகத்துக்கீர்ற மாதிரி நாமும் மாறிக்கொண்டு இருக்கின்றோம் ஆனால் எமது மனங்களிலே சில தவறான எண்ணங்கள், சிந்தனைகள் விதைக்கப்படுகின்றன. அவை களையப்பட வேண்டும். எமது மூதாதயர்கள் செய்தார்கள் நாமும் செய்கின்றோம் என்று இதற்கு காரணத்தையும் சொல்லி விடுவார்கள். மூதாதயரால் ஏன் செய்யப்பட்டது என்பதனை சிந்தித்துப்பார்க்க வேண்டி இருக்கின்றது. அவர்களால் செய்யப்பட்ட சில செயற்பாடுகள் மூட நம்பிக்கையாக இருக்கின்றன. (பல விடயங்கள் நல்ல விடயங்களே) சில அவர்களின் காலத்துக்குப் பொருத்தமானதாக இருக்கின்றன ஆனால் இன்று அவர்கள் காலம் போல் இல்லை உலகமே மாறிவிட்டன.

சரி விடயத்துக்கு வருகின்றேன் . இன்று ஒரு ஆணும் பெண்ணும் கதைக்கின்றபோது எத்தனை கட்டுகதைகள் கட்டப்படுகின்றன. ஆண்கள் பெண்களோடு கதைப்பது தவறா? ஆண் பெண் வேறுபாடு ஏன் பார்க்கப்படுகின்றது. ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாக இருக்க முடியாதோ. இன்று ஒரு ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாக பழகுகின்றபோது எத்தனை கட்டுக்கதைகள் கட்டப்படுகின்றது. ஏன் இந்த நிலை.

பெண்ணடிமை பற்றிப்பேசுகின்றபோது ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்கின்றோம் அப்படி என்றால் ஆண்கள் எத்தனை பெண்களுடன் எப்படிப் பேசினாலும் அதனை நாம் பொருட்படுத்துவதில்லை. ஏன் ஒரு பெண் ஒரு ஆணுடன் பேசும்போது அந்தப்பெண்ணை சந்தேகக் கண்ணோடு பார்க்கின்றோம். பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா. இது பெண்ணடிமைத்தனம் இல்லையா?

இன்று எல்லாவிதத்திலும் ஆண்களுக்கு பெண்களும் சளைத்தவர்கள் இல்லை என்று பல பெண்கள் சரித்திரம் படைத்துவரும் நிலையில் ஏன் நாம் இன்னும் பெண்களை குட்டிச் சுவராக்க நினைக்கின்றோம்.

ஒரு ஆணும் பெண்ணு நல்ல நண்பர்களாக பழகிக்கொண்டு இருக்கும்போது அந்தப்பெண்ணுக்கு திருமணம் என்று வருகின்றபோது இருவரது நட்பும் முறிவடைகின்றன. ஏன் இந்த நிலை.

அந்தப்பெண்ணின் கணவன் அந்தப்பெண் மீது நம்பிக்கை இல்லாமலா திருமணம் செய்கின்றார். நம்பிக்கை இருந்தால் அவளது நண்பர்களோடு பேச விடலாமல்லவா? இது பெண்களை அடிமைப்படுத்தும் செயலல்லவா? (எல்லா கணவன்மாரும் இப்படி இல்லைதான் சில நல்ல கணவன்மாரும் இருக்கின்றனர்) சரி திருமணத்தின் பின் பெண்களோ தமது ஆண் நண்பர்களை பிரிய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஆனால் ஆண்களுக்கு இந்த நிலை இருக்கின்றதா? இல்லையே யாருடனும் எப்போதும் பேசும் சுதந்திரம் இருக்கின்றதே. இது பெண்களை அடிமைப்படுத்துகின்ற ஒரு செயலாகும்.

ஒரு பெண் ஒரு ஆணுடன் கதைக்கும்போது நாம் ஏன் சந்தேகக் கண்ணோடு பார்க்கின்றோம். நல்ல மனதோடு பார்க்கலாமல்லவா? பெண்களும் ஆண்களைப்போன்றவர்கள்தான். ஆண்களுக்கு என்ன உரிமை இருக்கின்றதோ அந்த உரிமை பெண்களுக்கும் இருக்கின்றது என்பதனை மறந்துவிடக்கூடாது.
read more...

வியாழன், 17 செப்டம்பர், 2009

மட்டக்களப்பில் நடப்பதென்ன...

இன்று வலைப்பதிவு பயன்பாடு அதிகரித்துவிட்டது. ஒவ்வொரு நாளும் பிதிய பதிவர்களின் வருகை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. சில பதிவார்கள் தான் நினைக்கின்ற விடயங்களை எல்லாம் பதிவிட நினைக்கின்றனர். அவர்கள் பதிவிட நினைக்கின்ற விடயம் சரியானதா? அதன் உண்மைத்தன்மை என்ன என்ற விடயங்களை கருத்தில் எடுக்காமல் பதிவிடுகின்றனர்.

சிலரோ வேண்டுமென்றே சில வதந்திகளை வலைப்பதிவுகள் மூலமாகப் பரப்பிக்கொண்டு இருக்கின்றனர். இதன் மூலம் பல சமூகப்பிரச்சனைகளை கொண்டு வரக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. வலைப்பதிவை ஆரம்பித்துவிட்டோம் என்பதற்காக எதனையும் எழுதிவிட முடியாது. எங்களுக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கலாம். அக் கருத்துக்கள் உண்மையானதாக இருக்க வேண்டும்.

நான் இந்த இடுகையினை இடுவதற்குக் காரணம் நண்பர் வந்தியினால் இடுகயிடப்பட்ட மதம் பிடித்த பாடசாலைகள். எனும் இடுகைக்கு ஒருவரால்

//Azhar சொல்வது:
can u tell in which muslim school "Non muslim girls" forced to wear Muslim Dress?And reason why those girls change dress close to school is, school is only for girls and by wearing muslim dress all the way from home to school is to safe guard themself and they are practicing islam at their best. And they go to that school for education and it may be the school they could get admission too.
And you didnt write a single word about Batticalo College of Education and its racism. Any Reason?//
என்று பின்னூட்டமிட்டிருந்தார்.

அதேபோன்று ஒரு பதிவர் தனது வலைப்பதிவிலே

//மட்டக்களப்பு தாழங்குடா கல்வியியல் கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்துவரக்கூடாது என்று சக தமிழ் மாணவர்கள் உத்தரவிட்டுள்ளனர். நாட்டின் ஏனைய பகுதிகளில் அமைந்துள்ள 16 கல்லூரிகளில் எவ்வித தடையும் இன்றி அவரவர் மத கலாச்சார மரபுகட்கு ஏற்ப நடப்பதற்கான அனுமதி இருக்கும் நிலையிலேயே இந்த நிகழ்வு இடம்பெறுகிறது.

//
என்றும்
//பகிடிவதை (ரெகிங்) என்ற பெயரில் பண்பாடற்ற இனத்துவேச நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.//


//மாணவர்கள் 3 பேருக்கு மேல் கூடக்கூடாது என்று சட்டம் இருக்கும் நிலையில் சைவ மறு மலர்ச்சி இயக்கம், பொங்கும் தமிழர் படையணி என இயங்க அனுமதி அளித்துள்ள நிர்வாகம் முஸ்லிம் மாணவர் விடையத்தில் இறுக்கமான போக்கை கையாளுகிறது. அத்துடன் ஏனைய மத மாணவர்கள் தமது மத நிகழ்வுகளை அனுஷ்டிக்க வசதி செய்திருக்கும் நிர்வாகம் முஸ்லிம் மாணவர்களை நோன்பு கால விஷேட தொழுகையில் ஈடுபட அனுமதிப்பதில்லை.//

என்றும் குறிப்பிட்டுள்ளார்.


இந்த விடயங்கள் தொடர்பாக நான் மட்டக்களப்பைச் சேர்ந்தவன் என்பதனால் என்னிடம் சரியானதொரு விளக்கமளிக்கும்படி பதிவுலக நண்பர்கள் சிலர் கேட்டிருக்கின்றனர். நான் மட்டக்களப்பைச் சேர்ந்தவன் என்பதனால் இதற்கு சில விளக்கங்களை தரவேண்டியவனாக இருக்கின்றேன்.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலே தமிழ், முஸ்லிம் உறவை சீர் குலைப்பதற்கு பலர் முயன்று வருகின்றனர். நானறிந்தவரையில் இங்கே குறிப்பிட்டதைப்போல் பாரிய சம்பவங்கள் இடம் பெற்றதாக அறிய முடியவில்லை. விரைவிலே இது தொடர்பில் கல்வியல்கல்லூரியின் உயர் அதிகாரிகளோடு கலந்துரையாடி உண்மை நிலவரம் என்ன என்று ஒரு பதிவிடுகின்றேன்.

இன்று பகிடிவதை என்பது பரவலாக இடம் பெற்று வருகின்றது. இதிலே தமிழ் மாணவர்களால் முஸ்லிம் மாணவர்கள் பாதிக்கப்படுவதும். முஸ்லிம் மாணவர்களால் தமிழ் மாணவர்கள் பாதிக்கப்படுவதும் உண்மைதான். இது இன ரீதியான பாதிப்புக்கள் அல்ல பகிடிவதை மட்டுமே. இதனை சில விசமிகள் வேறு விதமாக கதை கட்டி தமிழ், முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்த நினைப்பதே உண்மை.


எனது நண்பர்கள் பலர் பல்கலைக்கழகத்திலே முஸ்லிம் மாணவர்களால் தாக்கப்பட்டிருக்கின்றார்கள் பகிடி வதை எனும் போர்வையில். இதனை நாம் பிரச்சனையாக எடுக்கவில்லையே. சில மாணவர்களால் இப்படியான வேலைகள் செய்யப்படும் போது ஓட்டு மொத்தத்தில் கல்லூரியின் நிர்வாகத்தையும் அனைத்து மாணவர்களையும் குறை சொல்வது நியாயமானதல்ல.

இங்கே குறிப்பிடப்படுகின்ற விடயங்கள் உண்மையாக இருந்தால். சிறு சிறு விடயங்களுக்கெல்லாம் ஒன்று திரண்டு கடையடைப்பு, வீதி மறியல் என்று இறங்கும் முஸ்லிம் மக்களும். முஸ்லிம் அரசியல் வாதிகளும் இந்த விடயத்தில் மெளனிகளாய் இருப்பதேன்.

மற்றுமொரு விடயம் இங்கே விடுதலைப் புலிகள் சார்ந்த சில அமைப்புக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இன்றைய கால கட்டத்தில் எப்படி நேரடியாக இங்கே இந்த அமைப்பு இயங்க முடியும் என்பதே என் கேள்வி? இது வேண்டுமென்றே எமது இளம் கல்விச் சமுதாயத்தைச் சீரளிப்பதட்காக பரப்பப்படுகின்ற ஒரு போய்ப் பிரச்சாரமாகவே நான் பார்க்கின்றேன்.

இவ்வாறான பொய்ப்பிரச்சாரங்கள் மூலம் எமது இளம் கல்விச் சமுதாயத்தைச் புலிச் சாயம் பூசி கொன்றழிக்க நினைக்கும் பதிவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடும் போது அதன் உண்மைத் தன்மையினை அறிந்து பதிவிடும்படி வேண்டிக்கொள்கின்றேன்

இது தொடர்பில் விரைவில் கல்வியல் கல்லூரி உயர் உயர் அதிகாரிகளைச் சந்தித்து உண்மை நிலவரம் தொடர்பாக இடுகையிடுகிறேன்
read more...

புதன், 16 செப்டம்பர், 2009

என்னவென்று சொல்வேன்...

என்ன இந்த வாரம் தொடர் பதிவாகவே இருக்கின்றது. நண்பர்கள் விடுவதாக இல்லை. நண்பர் யோகா மற்றும் மருதமூரான் ஆகியோர் என்னை “காதல்-அழகு-கடவுள்-பணம்” எனும் தொடர் பதிவிற்கு அழைத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.

“காதல்-அழகு-கடவுள்-பணம்” நான்குக்கும் ஒரு தொடர்பு இருப்பதாகவே உணர்கின்றேன்.

காதல்


காதலில்லாமல் உலகமில்லை. காதல் என்பது அன்பு . ஒருவர் தன் தாய் மீது வைக்கின்ற அன்பும் காதலே. காதலிமீது வைக்கின்ற அன்பும் காதலே. காதலால் சரித்திரம் படைத்தவர்க்களுமுண்டு. காதலால் காணாமல் போனவர்களுமுண்டு.
காதல் புனிதமானது. இன்று காதலின் புனிததைக் கெடுப்போருமுண்டு. காதலை வாழவைப்போருமுண்டு.

காதலை நான் அமுதென்பதா?
விசமென்பதா? - அன்று
காதலித்தேன்...
ஒவ்வொரு நிமிடங்களிலும்
சொர்க்கத்தின் வாசற்படிகள்
என்னை வரவேற்றன. - இன்று
அவளால் கைவிடப்பட்டேன்
மரண வேதனை உணர்கின்றேன்.
சொல்லுங்கள் காதலைப்பற்றி
நான் என்ன சொல்ல.


அழகு

ஒருத்தியிடம் என் காதலைச் சொன்னேன். நான் அழகில்லை என்றாள் .இன்னொருத்தி என்னை காதலிப்பதாய் சொன்னாள்.
எதனால் வந்த காதல் என்றேன். என் அழகைப்பார்த்து வந்தது என்றாள். சொல்லுங்கள் நான் அழகா? அழகில்லையா?

அழகு அவரவர் இரசனையைப் பொறுத்தது. ஒருவருக்கு அழகாகத் தெரிவது இன்னொருவருக்கு அழகில்லாமல் இருக்கலாம். ஆனால் நான் எல்லோருக்கும் அழகாகவே தெரிகின்றேன்.

கடவுள்
கடவுள் இருக்கின்றார் என்று சொல்பவனுக்கு அவனுள்ளே இருக்கின்றார். கடவுள் இல்லை என்று சொல்பவனையும் கைவிடமாட்டார்.

இன்று கடவுளின் தொழில்களை மனிதன் கையிலெடுத்துவிட்டதனால். அமைதியாக அவதானித்துக்கொண்டிருக்கின்றார். ஆடும்வரை ஆடட்டுமே என்று.

பணம்

பணம் பத்தும் செய்யும் என்பது அந்தக்காலம். எதையும் செய்யும் என்பது இந்தக்காலம். இன்று பணமிருந்தால் எல்லாமே நம் காலடியைத் தேடி வருகின்றன. பணம் இல்லை என்றாள் உற்ற நண்பனே நீயாரடா என்று கேட்பான். நான் அனுபவ ரீதியாக நான் அறிந்திருக்கின்றேன். பணம் இல்லாதபோது சொந்தங்களே நம்மைவிட்டு விலகும். பணமிருந்தால் அயலவரே சொந்தம் கொண்டாடுவார்கள்.

பணம் ஒருசிலரின் உற்ற நண்பன்.

ஏழைகளின் எதிரி.

சரி எப்படி “காதல்-அழகு-கடவுள்-பணம்” நான்குக்கும் தொடர்பு இருக்கின்றது என்று கேட்கின்றீர்களா? ஏதோ ஒரு வகையில் அழகைப்பார்த்து காதல் வருகின்றது. காதலர்கள் ஏழை பணக்காரன் பார்க்கவில்லை என்றாலும் காதல் திருமணம் வரைக்கும் செல்ல வேண்டுமென்றால் பெற்றோர் பணத்துக்கே முதலிடம் கொடுப்பார். எத்தனை காதலர்கள் பணத்தினால் உயிரை விட்டிருக்கின்றனர். இவை அனைத்துக்கும் துணை இருக்க கடவுள் நம்பிக்கை வேண்டும். நம்பினால் கடவுள் கைவிடார்.



சில நாட்களுக்கு முன் என் வலைப்பதிவு திருடப்பட்டு மீட்டெடுத்தேன். எனது கூகுள் விளம்பரக்கணக்கும் (google adsense)முடக்கப்பட்டது ஏனென்று தெரியவில்லை. இரு நாட்கள் முயற்சி செய்தும் கணக்கினை மீளப்பெறுவதிலே சிக்கல் இருக்கின்றது . இரு நாட்கள் அதனால் நண்பர்களின் பதிவுகளுக்கு வரமுடியவில்லை.
read more...

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

இலங்கை அனானிகள் சந்திப்பு இன்று பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டன...

இலங்கை அனானிகள் சந்திப்பு இன்று காலை ஒன்பது மணியளவில் மறைவான, ஒதுக்குப்புறமான ஒரு இடத்திலே இடம் பெற்றன. இந்தச் சந்திப்பிலே சில அனானிகள் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பிலே வலைப்பதிவுகளையும், வலைப்பதிவர்களையும் எப்படி தாக்குவது என்று பல்வேறுபட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

இந்தச் சந்திப்பிலே தலைமை தாங்கும் அனானி தனது தலைமை உரையிலே. நாம் ஆரம்பகாலங்களைவிட தப்போது தொழினுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து வருகின்றோம். அன்று ஒருசில வலைப்பதிவர்களையும் வலைப்பதிவுகளையும் தாக்கி வந்த நாம் இன்று எமது சேவையினை வியாபித்திருக்கின்றோம். எமது எதிர்காலத்திட்டங்கள் தொடர்பாக நல்ல முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.

தொடர்ந்து ஒரு அனானியினால் கடந்தகால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதிலே எந்தெந்த வலைப்பதிவுகள் எப்படி எப்படித்தாக்கப்பட்டன போன்ற விடயங்கள் அலசி ஆராயப்பட்டிருந்தது.

ஒரு அனானி எழுந்து தான் சில வலைப்பதிவுகளிலே மோசமான வசனங்களினால் பின்னூட்டமிட்டும் அந்த வலைப்பதிவர்கள் அதனை கருத்தில் எடுத்துக்கொள்வதில்லை என்றும். கொபப்படுவதாகத் தெரிவதில்லை என்றும் இவர்களைக் கோபப்படவைக்க அல்லது இவர்களைத்தாக்க வேறு ஏதாவது வழியினைச் சொல்லுங்கள் என்றார்.

மற்றுமோர் அனானி எழுந்து சில வலைப்பதிவுகளிலே கருத்துரை மட்டுறுத்தல் இருப்பதனால் கஷ்டமாக இருக்கின்றது என்றார்.


தலைமைதாங்கும் அநாநி௮ மீண்டும் எழுந்து வலைப்பதிவுகளில் மாற்றங்களைச் செய்யும். பதிவர்களின் பெயரிலே பின்னூட்டமிடும் முறைகளை தான் பல வருட முயற்சியின் பின் பெற்றிருப்பதாகவும் பரிச்சார்த்தமாக சில வலைப்பதிவுகளை மாற்றி அமைத்து பார்த்ததாகவும் எதிர்காலத்திலே கைகொடுக்கும் என்ற நம்பிக்கை இருந்தது என்றும் இப்போது அந்த நம்பிக்கை வீண் போய் விட்டதாகவும் குறிப்பிட்டார்.

இன்று இப்படியான வேலைகளைச் செய்பவர்களை பிடிக்க முடியும் என்றும் தான்தான் இந்த வேலைகளைச் செய்கின்ற அனானி என்றும் சிலருக்கு தெரியவந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

இன்னுமொருவர் எழுந்தார் பார்த்தால் அவர் ஒரு பதிவர் தான் பதிவராக இருந்தாலும் அனானியாகவே அதிக பின்னூட்டங்களை இட்டு பல பதிவர்களை திக்குமுக்காட செய்து கொண்டிருக்கின்றேன். நான் வலைப்பதிவர் சந்திப்புக்கு போகவில்லை வலைப்பதிவர் சந்திப்பை நேரடி ஒலிபரப்பு மூலம் பார்த்து என்னால் முடிந்த சில வேலைகளைச் செய்திருக்கின்றேன் என்றார்.

அடுத்து அனானிகள் ஒன்று சேர்ந்து இலங்கை பதிவர்களுக்கான திரட்டி ஒன்றை ஆரம்பித்தால் அதன் மூலம் பதிவர்கள் தொடர்பான விபரங்களை இலகுவாக அறிந்து கொள்வதோடு நமது எதிர்காலச் செயற்பாடுகளுக்கு இலகுவாக இருக்கும் என்றார். யார் அந்த திரட்டியை நிர்வகிப்பது என்பது எவருக்கும் தெரியக்குடாது என்றும் குறிப்பிட்டார்.

அடுத்து கடந்த காலங்களில் அதிகம் தாக்கப்பட்ட பதிவர்களின் பெயர்களும் தாக்கப்பட்ட விதங்களும் ஏனைய புதிய அனானிகளுக்காக தெரியப்படுத்தப்பட்டது.

அப்பொழுது ஒரு அனானி அடிக்கடி சந்திப்புக்களை ஏற்பாடு செய்யவேண்டும் என்றும். இலங்கையில் இருக்கின்ற முக்கிய பதிவர்களை அடிக்கடி தாக்கிக்கொண்டிருக்கவேண்டும் என்றும் கூறினார்.

அடுத்து புதிய திட்டங்கள் பற்றி ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் என்று தலைமைதாங்கும் அனானி சொன்னார். எல்லோரும் மெளனமானார்கள். சரி சிந்தித்து சொல்லுங்கள் என்று சொன்னார் தலைமை அனானி. இரண்டு மணித்தியாலங்களாகியும் எவரும் வாய் திறக்கவில்லை. எவருமே சுயமாக சிந்திக்கும் ஆற்றல் அற்றவர்கள் என்பதனை உணர்ந்து கொண்ட தலைமை அனானி ஒரு மாதத்தின்பின் மீண்டும் சந்திப்பதாகவும் அதுவரைக்கும் யோசித்து நல்ல திட்டங்களோடு வாருங்கள் என்றார். (எவருக்குமே மூளை இல்லை என்பது தலைமை அனானிக்கு மூளை இருந்தால்தானே புரியும்)

இந்து மணித்தியால சந்திப்பிலே எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மையான விடயம்.

இந்த சந்திப்பு இடம்பெற்ற மண்டபத்துக்கு அருகிலே இருக்கும் வீதியால் நான் சென்ருகொண்டிருன்தேன். அப்போது அந்த மண்டபத்தின் காவலாளி என்னைப்பார்த்து என்ன கொடுமை சார் என்றான் என்ன என்று கேட்டேன் அவர்தான் இந்த விடயங்களை என்னிடம் கூறினார். நானும் எல்லா விடயங்களையும் கேட்டுவிட்டு என்ன கொடுமை சார் இது என்று போய்விட்டேன்.

அனானிகள் ஒழிக....
read more...

திங்கள், 14 செப்டம்பர், 2009

என்னைத் தேடி வந்த தேவதை..

ஆசை இல்லா மனிதர்கள் இல்லை. எனக்கு அதிகமான ஆசைகள் இருக்கின்றது என்பது நிலாமதி அக்காவுக்கு தெரிந்துவிட்டது போலும். என்னிடம் வரம் தரும் தேவதையை அனுப்பிவிட்டார். என்னை பத்து வரங்கள் மட்டுமே கேட்க வேண்டும் என்றும் நிபந்தனையும் விதித்துவிட்டார்.

சரி நிறையவே ஆசைகள் எந்த வரத்தை முதலில் கேட்பது. எனக்கு இருக்கின்ற ஆசைகளை பட்டியலிடுகின்றேன்.

1. பாரதி மீண்டும் பிறக்கவேண்டும் பாரதியிடம் நான் தமிழ் படிக்க வேண்டும்.
பாரதியின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டவன் பாரதியின் கண்ணன் பாடல்களில் அடிக்கடி தொலைபவன். இன்று பாரதி இல்லையே என்று கவலைப்படுபவன்.

2. யுத்தத்தின் கொடுமையால் தாய், தந்தை, சொந்தங்களை இழந்து சிறுவர் இல்லங்களிலே தவிக்கின்ற அந்தச் சிறுவர்களின் தாய், தந்தையர்கள் மீண்டும் கிடைக்கக் வேண்டும்.

இன்று எத்தனை சிறுவர் இல்லங்கள் சிறுவர் இல்லங்களிலே நம் சிறார்கள் படும் இன்னல்கள்தான் எத்தனை. அவர்களின் ஏக்கங்கள்தான் என்ன? அவர்களின் எதிர் காலம் பற்றி சிந்திக்க உரியவர்கள் முன்வரவில்லை என்பது கவலைக்குரிய விடயமே. இல்லங்களிலே இருக்கின்ற ஆண்சிறார்களைவிட பெண் பிள்ளைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவர்களின் எதிர்கால நிலை என்ன?

3. உலகில் இருக்கின்ற மொழிகளிலே தமிழ் மொழி முதலிடத்தில் இருக்க வேண்டும்.

உலக மொழிகளிலே தமிழ் மொழி முதலாவது மொழியாக அங்கிகரிக்கப்பட வேண்டும். உலகெங்கும் தமிழ் மொழி கட்டாய பாடமாக பல்கலைக்கழகங்களிலே சேர்க்கப்பட வேண்டும்.

4. ஏழைகள் இல்லாத பூமி வேண்டும்.
பணம் இருந்தால் எதனையும் செய்யமுடியும் ஏழையிடம் பணமில்லை அவன்படும் வேதனை அவனுக்குத்தான் தெரியும். கஷ்டப்பட்டு படித்து, பட்டம் பெற்று என்ன பயன் வேலை கிடைப்பதென்றால் பணம் கொடுக்கவேண்டும். எத்தனை ஏழைகள் நிம்மதியைத் தொலைத்தபடி...

5. மறைந்து தமிழர் கலைகளை வளர்க்க கேட்பேன்.
மறைந்து வரும் தமிழர் கலைகளை வளர்க்கவேண்டும் என்ற ஆசை நம் கலைஞர்களை ஒன்று திரட்டி சில கலைத்துறை படைப்புக்களை வெளி உலகுக்கு கொண்டு வரவேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. அதற்கு உதவும்படி கேட்பேன்.

6. சாதி, மத பேதமற்ற உலகம் வேண்டும்.
இன்று உலகில் சாதி, மதம் என்று எத்தனை பிரச்சனைகள். எத்தனை உயிர்கள் பறிக்கப்படுகின்றன.

7. மீண்டும் என் இளமைக்காலம் வேண்டும்.
என் தந்தை என் சிறு வயதிலே இறந்து விட்டார் சாதாரண குடும்பத்தை சேர்ந்த எனக்கு சிறு வயதிலே குடும்ப சுமைகள் காரணமாக என் தந்தையின் வழியில் பிழைப்புக்காக விவசாயத்திலே ஈடுபடவேண்டிய கட்டாய சூழ்நிலை. இளமைக்காலங்கள் விவசாயத்தோடும் படிப்போடும் கடந்துவிட்டது. சிறுவர்கள் அனுபவிக்க வேண்டிய எதனையும் அனுபவித்ததில்லை. மற்றைய சிறுவர்களை பார்த்து கவலைப்பட்டதுண்டு.

8. கவலைகள் இல்லாத மனது வேண்டும்.
என் மனது நிறைய கவலைகள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை சந்தோசங்கள் சில நேரங்களில் வந்து எட்டிப்பார்த்துவிட்டுச் செல்கின்றன.

9. தமிழரை அழிப்பவர்களும், அழிக்க நினைப்பவர்களும் மறு பிறவியில் தமிழராய் பிறக்க வேண்டும்.
அப்பொழுதுதான் தமிழர் பண்பாடு , தமிழின் இனிமை , தமிழர் வேதனை ...... என்று எல்லாவற்றையும் அவர்கள் அறிவார்கள்.

10. நான் கடவுளாய் நினைக்கின்ற ஒரு மனிதர் என்றும் இறவாத வரம் வேண்டும்.


இலங்கையில் இருக்கும் பல பதிவர்களுக்கு நிறையவே ஆசை இருப்பதை அறிந்தேன். என்னிடம் வந்த தேவதையை அவர்களில் ஐவரிடம் அனுப்புகின்றேன்.

உஞ்சலில் ஆடும் சுபானு
******************************


எனது மருமகள் ஏழாம் தரம் படிக்கின்றார். படிப்பு மட்டுமல்ல எல்லாவற்றிலும் கெட்டித்தனம். அவளது நீண்டநாள் ஆசையினை நிறைவேற்றி இருக்கின்றேன். தானும் வலைப்பதிவு ஆரம்பித்து சிறுவர்களுக்கு பயனுள்ள தகவல்களை பதிவிட வேண்டுமென்பது என்பது அவரது ஆசை...



எனது உதவியோடு சிறுவர் உலகம் என்றும் வலைப்பதிவினை ஆரம்பித்துவிட்டார். இனி அவரும் எங்களோடு....
read more...

ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

காதலால் வந்த வலி...


உன்னிடம் இருந்த -என்
இதயத்தைத் தூக்கி
எறிந்துவிட்டாய் இன்னும்
என்னிடம் வந்து சேரவில்லை
அலைமோதி திரிகின்றது
என் இதயம்.....


என்னிடம் இருந்த
உன் இதயத்தை - நான்
தரமறுத்தபோது
தட்டிப்பறித்துவிட்டாய்......

சொர்க்கம், நரகம்
இரண்டும் இருப்பதாக
அறிந்தேன் - பின்
உணர்ந்தேன் உன்னை
காதலித்ததனால்.....


அன்று உன்னைக்
காதலித்தபோது - நாம்
சொர்க்கத்தில் வாழ்கின்றோம்
என்று நீயே சொன்னாய்
நானும் சொர்க்கத்தில்
வாழ்வதாய் உணர்ந்தேன்....


இன்று என்னை - நீ
தூக்கி எறிந்தபோது
நரகத்தின் வேதனையில்
தவிக்கின்றேன்.....


இன்று என்னிடம்
மீதமிருப்பது - உன்
நினைவுகளைத்தவிர
வேறெதுவுமில்லை....


அன்று நீ என்னோடு
பேசிய இரவுகள்
குறுகியதென்று - அந்த
இரவுகளோடு நான்
கோபப்பட்டதுண்டு...


இன்று இரவுகளோ - உன்
நினைவுகளால் என்னை
வதைக்கின்றன - என்
துன்ப துயரங்களில்
சரி பாதி நீ என்றாய்
இன்று ??????????????


இன்றைய இரவுகளில்
என் கண்ணிரைத்
துடைத்து என்னைத்
தாலாட்டும் -என்
தலையணைக்கு தெரியும்
உன்னால் நான் படும்
நரக வேதனை....


இன்று உணர்ந்து
கொள்கின்றேன் - இது
உன் தவறல்ல
நான் ஏழையாய்
பிறந்ததுதான்
தவறென்று...
read more...

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

ஏன் இந்தப் புறக்கணிப்பு?

இலங்கையின் பொருளாதாரத்திலே பெரும் பங்கு வகிக்கின்ற தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறுபட்ட இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் படும் அவலங்களை உரியவர்கள் பார்க்காமல் இருப்பது போன்று தெரிகின்றது.

இன்று தொட்டத்தொளிலாளர்கள் தொடர்பில் பேசப்படுகின்ற விடயம்தான் சம்பள உயர்வுப் பிரச்சனை. இன்று அவர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த சம்பளம் 290 ரூபா. இன்று இலங்கையின் பொருட்களின் விலை என்ன? ஒரு டீ குடிக்க 25 ரூபா வேண்டும். இந்த 290 ரூபா ஒரு நாள் சாப்பாட்டுக்கே போதுமானதாக இல்லை. இந்த 290 ரூபாவை வைத்துக்கொண்டு இவர்களால் என்ன செய்ய முடியும்.

ஒரு குடும்பத்தலைவன் இந்த 290 ரூபாவை வைத்து என்ன செய்ய முடியும். தான் மட்டும் சாப்பிட்டு காலத்தை கடத்துவதா? தன குடும்பத்தில் உள்ளவர்களின் அத்தனை தேவைகளையும் எப்படி சமாளித்துக் கொள்ள முடியும்.

இன்று இலங்கையிலே ஏனைய பிரதேசங்களிலே ஒரு கூலித்தொலிலாலிக்கு வழங்கப்படும் குறித்த பட்ச கூலி 500 ஆகவும் இருக்கின்றது. சில இடங்களில் 1000 ஐயும் தாண்டுகின்றன. இது இவ்வாறிருக்க ஏன் இவர்கள் மட்டும் புறக்கணிக்கப்படுகின்றனர்.

அன்று தொட்டு இன்று வரை தொட்டத்தொளிளார்கள் தமது கூலி தொடர்பிலே பல போராட்டங்களை நடாத்தியும் நல்ல தீர்வு கிடைத்ததாக இல்லை. இது தொடர்பில் சில அரசியல்வாதிகள் சரியான தீர்வினை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க பின்னிப்பதேன். தோட்டத் துரைமார்களை பகைக்கும்போது தமது அரசியல் எதிர் காலம் பாதிக்கப்பட்டு விடும் என்பதாலா?

இன்று எல்லோரும் ஒரு நாட்டு மக்கள் என்று பேசிக்கொண்டிருப்பவர்களிடம் கேட்கின்றேன் மலையகம் என்பது தனி ஒரு நாடா? நாம் எல்லோரும் இலங்கையர்கள் எனும் போது ஏன் இந்த மக்கள் புறக்கணிக்கப்பட வேண்டும். ஏனைய பிரதேசங்களைப் போல் இந்த மக்களுக்கும் வசதிகள், சலுகைகள் வழங்கப்படலாம் தானே.

பிரதேச அபிவிருத்தி பிரதேச அபிவிருத்தி என்று பேசிக்கொண்டு இருக்கின்றோம். இன்று எத்தனை தொழிலாளர்கள் பல கஸ்ரங்களை அனுபவித்து வருகின்றார்கள். இவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு குறைந்த பட்சம் கூலியையாவது அதிகரித்து வழங்க முடியாமல் இருப்பது ஏன்?

சரியான முறையிலே வாழ்க்கைச் செலவுக்கேற்ற கூலி வழங்கப்படாதவிடத்து அவர்கள் மட்டுமல்ல அவர்களது எதிர்கால சந்ததியே பாதிக்கப்படுகின்றது. வாழ்க்கைச் செலவுக்கேற்ற கூலி வழங்கப்படாதபோது சிறுவர்களின் கல்வி, போசாக்கு உட்பட அனைத்துமே பாதிக்கப்படுகின்றன.

நண்பர் யோ (கா) குறிப்பிட்டது போன்று தோட்டத் தொழிலாளர்களை பலரும் ஏளனமாகப் பார்க்கின்ற ஒரு நிலை இருக்கின்றது. இந்த நிலை மாற வேண்டும். பிரதேச வாதம் என்பது எம் மனங்களில் இருந்து முற்றாகக் களையப்பட வேண்டிய ஒன்று. தமிழரின் இன்றைய நிலைக்கு பிரதேச வாதமே முக்கிய காரணமாகும். தோட்டத் தொழிலாளர்கள் என்று ஏளனமாகப் பார்ப்பதை விடுத்து அனைவரும் தமிழர்கள் என்ற சிந்தனை வர வேண்டும்.

இன்று வலையுலகத்திலும் தொட்டத்தொளிலாளர்களின் பிரட்சனைகள் பற்றி பேசப்படுவது மிக மிகக் குறைவு. மலையகத்திலே பதிவர்கள் குறைவு என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும் ஏனைய பதிவர்கள் மலையகம் பற்றி தங்களுக்கு தெரிந்த விடயங்களை ஏனைய பதிவர்களோடு பகிர்ந்து கொள்ளலாமல்லவா?

நண்பர் யோ (கா) அவர்களின் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வியல் போராட்டம் எனும் இடுகைக்கு வந்த பின்னூட்டங்களைப் பார்க்கும் போது கவலைப்பட வேண்டிய விடயமாக இருந்தது. அவரது பதிவுகளுக்கு வழமையாகக் கிடைக்கின்ற பின்னுட்டங்களைவிட மிக மிகக் குறைவாக இருந்தது. இதற்கு என்ன காரணம் பதிவர்களாகிய நாங்களும் தோட்டத் தொழிலாளர்களை ஏளனமாகத்தான் பார்க்கின்றோமா?

தோட்டத்தொளிலாளர்களும் எம்மைப் போன்ற தமிழர்களேதான். எமது உறவுகள்தான் நாம் அவர்களுக்காக எம்மாமால் முடிந்தவற்றை செய்வோம்
read more...

புதன், 9 செப்டம்பர், 2009

தொலைக்காட்சிகள் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துகின்றனவா?

தொலைக்காட்சிகள் மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு சாதனமாக அமைவது மட்டுமல்லாமல் நல்ல தகவல்களை வழங்கும் ஒரு சாதனமாகவும் இருக்கின்றது ஆனால் இன்று இந்த தொலைக்காட்சிகளே மக்களுக்கு தொல்லைக்காட்சிகளாக மாறிவிட்டன.

இலங்கையைப் பொறுத்தவரை தொலைக்காட்சியானது வானொலியைப்போல் போட்டி நிறைந்த ஒன்றல்ல. இதனால் மக்கள்மீது (பார்வையாளர்கள்) எதனையும் திணித்து விடலாம் என்பதுபோல் இந்த தொலைக்காட்சிகள் மாறிவிட்டன.

தரமான நிகழ்ச்சிகள் வழங்கப் படுகின்றதா. அவர்களால் வழங்கப்படும் நிகழ்ச்சிகளை எத்தனை பேர் பார்க்கின்றனர். நம் நாட்டுக் கலைஞர்கள் ஊக்கப்படுத்தப்படுவதாக சொல்கின்றார்கள் இது எந்த அளவில் இருக்கின்றது என்று தெரியவில்லை. சில நிகழ்ச்சிகள் நம் நாட்டு இளம் கலைஞர்களை ஊக்கப்படுத்துவதற்காகச் செய்யப்படுகின்றன. இங்கே இக் கலைஞர்கள் தெரிவு செய்யப்படும் விதம்தான் சரியானதா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.

இன்று போட்டிகளிலே பங்குபற்றும் போட்டியாளர்கள் நேயர்களின் தொலைபேசி குறுந்தகவல் (sms) தெரிவு செய்யப்படுகின்றனர். நேயர்களின் தொலைபேசி குறுந்தகவல் (sms) மூலமான தெரிவு சரியானதா? இன்று தொலைபேசிப்பாவனை அதிகரித்துவிட்ட நிலையிலும் கையடக்கத்தொலைபேசிக்கான சிம் இலவசமாக கிடைப்பதாலும் ஒவ்வொருவரும் பல சிம் பாவிக்கின்றனர். ஒருவர் ஒரு போட்டியாளருக்கு பல sms அனுப்ப முடியும். அத்தோடு தொலைபேசிப்பாவனை சற்றுக்குறைவாக இருக்கின்ற பிரதேசங்களிலே இருந்து கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் இந்த sms மூலமான தெரிவுகளால் அதிகம் பாதிக்கப்படுவர் அல்லவா.


இன்று sms அனுப்புவதற்கான கட்டணங்கள் மிகமிகக் குறைவு ஆனால் போட்டியாளர்களை தெரிவு செய்வதற்காக sms அனுப்பும்போது sms க்கான கட்டணம் அதிகம் sms மூலம் உழைப்பதட்காகவா கலைஞர்களை ஊக்கப்படுத்துகின்றோம் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சிகள்.

தொலைக்காட்சித்தொடர்கள், நிகழ்ச்சிகள் இந்திய தொலைக்காட்சிகளில் இருந்து பெறப்பட்டவயாக இருக்கின்றன. ஏன் நம் நாட்டில் சிறந்த கலைஞர்கள் இல்லையா. இன்று இலங்கையிலே எத்தனையோ கலைஞர்கள் இருக்கின்றார்கள். அவர்களை வைத்து சில நிகழ்ச்சிகளை செய்யலாமல்லவா.

இன்று சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (நாடகங்கள்) இங்கேயே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகளாக இருக்கின்றன. ஆனால் அதனை எத்தனை பேர் பார்க்கின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை. இன் நாடகங்களில் நடிப்பவர்கள் எப்படி நடிக்கின்றார்கள் என்று பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும். இலங்கையில் எத்தனை நாடகக் கலைஞர்கள் இருக்கின்றனர்கள் அவர்கள் இவர்களின் கண்ணுக்குத்தெரிவதில்லையா?. நல்ல கலைஞர்களை பயன்படுத்தலாமல்லவா?

அடுத்து சில அறிவிப்பாளர்களின் தமிழ் உச்சரிப்பு பற்றி நான் சொல்லவேண்டியதில்லை. இவர்கள் பேசுவது என்ன மொழி என்று யோசிக்கவேண்டி இருக்கின்றது.

பல அறிவிப்பாளர்கள் இருந்தபோதும் ஒரு சில அறிவிப்பாளர்களை மட்டும் எல்லா நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை. மற்ற அறிவிப்பாளர்கள் தரம் குறைந்தவர்களா. அப்படி தரம் இல்லாத அறிவிப்பாளர்களாக இருந்தால் புதிய அறிவிப்பாளர்களை சேர்த்துக்கொள்ளலாம்.

ஒரு அறிவிப்பாளர் தலைவிரி கோலமாக வந்து தனது பேச்சை ஒன்றில் ஆரம்பித்து இன்னொன்றில் முடிப்பதும். அளவுக்கதிகமான நளினமும் தொடர்ந்து பார்ப்பவர்களை சலிப்படைய செய்யுமல்லவா.

சில திரைப்படங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப் படுவதோடு பாடல்கள் கூட சில பாடல்களே திரும்ப திரும்ப ஒளிபரப்பப் படுகின்றன. நிகழ்ச்சிகளிலே நேயர்களின் கருத்துக்களுக்காக வழங்கப்படும் தலைப்புக்கள் சில வேளைகளில் பொருத்தமில்லாத தலைப்புக்களாக வழங்கப்படுகின்றன.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் நம் நாட்டுக்கலைஞர்களை ஊக்கப்படுத்துவதொடு நல்ல நிகழ்ச்சிகளை தந்து தமிழ் மொழியினை கொலை செய்யாமலும் இருக்க வேண்டும் என்பதே எனது அவா.
read more...

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

இன்று கொண்டாட்டம்தான்






நண்பர் பிரபா (விழியும் செவியும் வலைப்பதிவுக்கு சொந்தக்காரரான நம்ம பிரபாதான்) இன்று தனது ................. வது பிறந்த நாளை வெகு விமர்சையாகக் கொண்டாடுகின்ற்றார்


அவரை .............. பல பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகின்றேன்.
இவர் எனக்கு நல்ல ஒரு நண்பர். நேற்று அவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இன்று விருந்துபசாரம் இருப்பதாகவும். தனது பிறந்தநாளுக்காக உலகளாவிய ரீதியிலும் (எழுத்தறிவு தினம்), மற்றும் நாட்டிலும் (கிரிக்கெட்) பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் சொன்னார்.
விருந்துக்கு போவதற்கு நான் தயார் நீங்களும் வந்திடுங்க.
இவரைப்பற்றி

ஒரு அறிவிப்பாளர் மட்டுமன்றி சிறந்த தொழினுட்ப உதவியாளரும் கூட. எமது வானொலியின் தொழினுட்ப செயற்பாடுகளில் இவரின் பங்கு அளப்பெரியது.

வலைப்பதிவுகளை வாசிப்பதோடு இருந்த என்னை வலைப்பதிவினை ஆரம்பிக்கத்தூண்டியவர். சூது வாது, பொறாமை என்று சொல்வார்களே அது இவரிடம் நெருங்கவே முடியாது. எல்லோருக்கும் உதவும் உள்ளம் படைத்தவர்

பிரபாதான் என்னை வலை உலகத்துக்குள் நுழைவதற்கு ஊக்கப்படுத்தியவர் என்பதனால் அவருக்கு நான் ஊக்கப்படுத்தல் விருதினை அவரது பிறந்த தினத்திலே வழங்குவதில் மகிழ்வடைகின்றேன்.

இவ்விருதினை எனக்கு நண்பர்களான யோ வாய்ஸ் , குறை ஒன்றுமில்லை, மேனகா சத்தியா, வீட்டுப்புறா சக்தி ஆகியோர் வழங்கி இருந்தனர் அவர்களுக்கு எனது நன்றிகள்.


நான்கு விருதுகளையும் என்னை ஊக்கப்படுத்தும் நாற்பது பேருக்கு வழங்க வேண்டுமே.

LOSHAN - லோஷன்


வந்தியத்தேவன்

புல்லட்டின் *டுமீல்*


SShathiesh


கடலேறி

ஐந்தறைப்பெட்டி

யாழினி

ஆ.ஞானசேகரன்

பிரியமுடன் வசந்த்

ஜமால்

தமிழரசி - எழுத்தோசை

ஹேமா - வானம் வெளித்த பின்னும்

பிரிவையும் நேசிக்கும் காயத்ரி

கானா பிரபா

வால்பையன்

சிந்து

சுசி

ஜெகநாதன்

ilangan

சுப.நற்குணன்

நிலாமதி

சப்ராஸ் அபூ பக்கர்

ஸ்டார்ஜன்


பிரியங்கா

Vidhoosh/விதூஷ்

மிக முக்கிய பின் குறிப்பு : இந்த விருது உங்களை யார் அதிகமாக ஊக்கப்படுத்துகிறார்களோ அதிகமாக பார்வையிடுபவர்கள்,உங்களுக்கு பிடித்த மற்றவர்களின் சமையல் குறிப்புகள் இப்படி பல காரணங்கள் இருக்கு.அதுதான் இந்த அவார்ட்டின் அர்த்தம்

சுசி எனக்கு நட்புக்கு விருது தந்திருக்கிறார் அவருக்கும் நன்றிகள்.


இவர்களோடு எனக்கு விருது தந்த நண்பர்களுக்கும் வழங்குகின்றேன்.

யோ வாய்ஸ்
குறை ஒன்றுமில்லை
மேனகா சத்தியா
வீட்டுப்புறா சக்தி

இவர்களுக்கு நான் நட்புக்கு விருதும் கொடுக்கின்றேன்.
read more...

திங்கள், 7 செப்டம்பர், 2009

அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த நிகழ்வு...


மட்டக்களப்பு களுதாவளை கல்வி அபிவிருத்தி ஒன்றியம் பல வருடங்களாக நம் சிறார்களின் கல்வி நடவடிக்கைகளிலே பல்வேறு பட்ட செயத்திட்டங்களிலே ஈடுபட்டு வருகின்றது அதிலும் குறிப்பாக பல்வேறு காரணங்களினால் பாடசாலையினை விட்டு இடை விலகிய மாணவர்களின் எதிர் காலம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி வருவதோடு பல செயத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.


இன்று மறைந்து வரும் தமிழர் நம் கலைகளை வளர்ப்பதிலும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. வருடா வருடம் சிறுவர் கலை விழாவினையும் நடாத்தி வருகின்றது


இவ வருடத்துக்கான கலை விழாவானது 05.09.2009 சனிக்கிழமை மாலை 05.31 க்கு ஆரம்பமானது. (அழைப்பிதழிலே குறிப்பிடப் பட்டதுபோல் சரியாக 05.31 க்கே நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.) இந் நிகழ்விலே பல துறை சார்ந்த்தவர்கள் கலந்து சிறப்பித்ததோடு சிறார்களின் திறமைகளைக் கண்டு வியந்து போனார்கள்.


மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம், தமிழ் மொழி வாழ்த்து என்று ஆரம்பமான நிகழ்ச்சிகள் நான்கு மணித்தியாலங்கள் பார்வையாளர்கள் ஒருத்தரைக்கூட எழுந்து செல்ல முடியாமல் தங்கள் வசம் ஈர்த்திருந்தார்கள் சிறுவர்கள். இன்று பார்வையாளர்களை இறுதி வரை வைத்துக் கொள்வதென்பது முடியாத காரியம் ஆனால் இந்தச் சிறுவர்களால் முடிந்துவிட்டது.


இன் கலை விழாவிலே தமிழர்களுக்கே உரித்தான கரகம், கும்மி, கோலாட்டம் வில்லிசை, நாடகம்..... என்று எல்லோரையும் மகிழ்வித்தனர்.


இங்கே குறிப்பாக ஒன்றைச் சொல்ல வேண்டும். சிறுவர்களால் மேடை ஏற்றப்பட்ட நிகழ்ச்சிகள் எதிலுமே எமது பங்களிப்பு இருக்கவில்லை. நாடகமானாளும்சரி, நடனமானாலும் சரி அவர்களாலேயே தயாரிக்கப்பட்டது. நாங்கள் மேற் பார்வை செய்தது மட்டுமே. அவர்களின் திறமைகளைக் கண்டு வியப்படைந்து விட்டோம்.


இந்த கலைவிழாவின் நிகழ்ச்சி தொகுப்பாளர் அடியேன்தான். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்பட்டன. (அறிவிப்பு ) ஆங்கிலத்தில் அறிவிப்பு செய்தது நான் இல்லை எட்டாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவிதான்.


அடியேன் நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைக்கின்றேன்.





பார்வையாளர்களில் ஒரு பகுதியினர்.









எமது கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்களில் சிலர்.
இன்றைய தினக்குரல் பத்திரிகையிலே. சிறுவர் கலைவிழா தொடர்பான படங்களும், செய்திகளும் வெளிவந்தது இருக்கின்றன. தினக்குரல் பத்திரிகைக்கு நன்றிகள்

(சிறுவர் கலைவிழா வீடியோ விரைவில் உங்களை வந்து சேரும்)
read more...

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

அனைவரும் மறந்திடாம வந்திடுங்க.....


கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சிறுவர் நலனிலே அக்கறை கொண்டு பல இளைஞர்கள், யுவதிகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டு இன்று பல்வேறு செயத் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது களுதாவளை கல்வி அபிவிருத்தி ஒன்றியம்.

பாடசாலையை விட்டு இடை விலகிய மாணவர்களுக்கான பல செயத்திட்டங்களை வழங்கி வருவதோடு. இது தொடர்பில் பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றது. அத்தோடு மாலை, இரவு நேர வகுப்புக்களையும் இன்னும் பல செயத்திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றது களுதாவளை கல்வி அபிவிருத்தி ஒன்றியம்.

வருடா வருடம் சிறுவர் கலை விழாவினையும் நடாத்தி வருகின்றது. இவ்வருடத்துக்கான சிறுவர் கலை விழாவானது 05.09.2009 சனிக்கிழமை மாலை 05.31 க்கு களுதாவளை கல்வி அபிவிருத்தி ஒன்றிய திறந்த வெளியரங்கிலே இடம்பெற இருக்கின்றது.


இக்கலை விழாவிலே தமிழர்களுக்கே உரித்தான பல கலை நிகழ்ச்சிகள் இடம் பெற இருக்கின்றன.


இக்கலை விழாவிலே கலந்து கொண்டு சிறுவர்களின் திறமைகளை கண்டு களிப்பதோடு ஊக்கப்படுத்துமாறும் அன்பாக அழைக்கின்றோம்.

(விரைவில் கலைவிழா நிகழ்வுகளின் விடியோ உங்களை வந்து சேரும்.)


read more...

புதன், 2 செப்டம்பர், 2009

மலையக மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த நாட்டுப்புறப் பாடல்கள்

நான் வலைப்பதிவுக்கு வந்த ஆரம்ப நாட்களில் இடுகையிட்ட மலையக நாட்டுப்புற பாட்டு... எனும் மீண்டும் இடுகையிடுகிறேன். நான் வலைப்பதிவுக்கு பிரவேசித்த ஆரம்ப நாட்களில் இடுகையிட்டதனால் இந்த மலையக நாட்டுப்புறப் பாடல்கள் பலரைச் சென்றடைந்து இருக்க வாய்ப்பு இல்லை என்பதனாலே மீண்டும் பதிவிடுகிறேன்.

தமிழருக்கென்று ஒரு தனித்துவமான கலை,கலாசார, பாராம்பரியங்கள் இருக்கின்றது.அவற்றில் குறிப்பாக தமிழர்களது கலைகள் தமிழ் மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைநத ஒன்றாக காணப்படுகின்றது. தமிழருக்கே தனித்துவமான பல கலைகள் இருக்கின்றன. அதிலும் கிராமங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை ,கிராமத்து மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த ஒன்றாக கிராமியக்கலைகள் விளங்குகின்றன.நான் அடிக்கடி கவலைப்படுவதுண்டு இப்போது கிராமப்புறங்களில்கூட கலைகளை காணமுடியாது தமிழர்களின் தனித்துவமான கலைகள் மறைந்து கொண்டு வருகின்றன். இவற்றுக்கான காரணம்தான் என்னவோ? தமிழர் கலைகளுக்கு ஒரு தனித்துவம் இருக்கின்றது அவை கட்டிக்காக்கப்பட வேண்டும்.


ஆரம்பத்திலே இருந்த தமிழர் கலைகள் எமக்குத் தெரியாது அம்மா அப்பா பாட்டன், பாட்டி சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றோம். எமது எதிர்கால சந்ததி நாம் அறிந்த அளவுக்குக்கூட அறிய வாய்ப்பு இல்லாமல் போகும் போல் இருக்கிறது... இன்று மலையக மக்களோடும் அவர்களது வாழ்வோடும் பின்னிப்பினந்த மலையகப் பாடல்களிலே எனக்குப்பிடித்த சில வரிகளை தரலாம் என்று நினைக்கிறேன் மலையாக மக்களின் நேரடி அனுபவங்களை இப்பாடல்களிலே காணக்கூடியதாக இருக்கிறது.

"கண்காணி காட்டுமேலே
கண்டக்கையா றோட்டுமேலே
பொடியன் பழமெடுக்க
பொல்லாப்பு நேர்ந்ததையா"

" காலையிலே நேரா புடிச்சு
காட்டுத்தொங்க போய் முடிச்ச
கூட நேரயலையே இந்த
குணப்பய தோட்டத்திலே"

அந்தணா தோட்டமெண்ணு
ஆசையா நானிருந்தேன்.
ஓர மூட்ட தூக்கச் சொல்லி
ஒதைக்கிறாரே கண்டாக்கையா"


"கல்லாறு தோட்டத்திலே
கண்டக்கையா பொல்லாதவன்
மொட்டே புடுங்குதேன்னு
மூணாளு விடட்டியவன். "


"ஓடி நேரா போகிறது
ஒருகூட கொளுந்தெடுக்க
பாவி கணக்குப் புள்ளே
பத்து ராத்து போடுறானே"



"எண்ணிக்குளி வெட்டி

இடுப்பொடிஞ்சு நிற்கையிலே
வெட்டுவெட்டு என்கிறானே
வேலையத்த கண்காணி"



"தோட்டம் புறலியிலே
தொரமேல குத்தமில்லே
கண்காணி மாராலே
கன பிரளி யாகுதையா"


இப்படி தமது தொழிலும், தொழில் சார்ந்த வாழ்க்கையும் அவர்களுக்கு ஏற்படும் பிரட்சனைகளும் இப்பாடல் தொட்டுக்காட்டுகின்றன.


வறுமை, வரட்சி என்பவற்றினாலும் பண்ணையாளர்களின் அடக்கு முறையாலும்,சாதிக்கொடுமயாலும் இவர்கள் புலம் பெயர்ந்து இருந்தாலும். பிழைப்புத்தேடி வந்த ஒரு இடமாகத்தான் கண்டியை [இலஙகையை] பார்த்தார்கள்.அவர்கள் தாயக நினைவிலிருந்து விடுபடாதவர்களாகவும் மீண்டும் தாயகம் நோக்கி போக வேண்டும் என்ற எதிர் பார்ப்புடனேயே வாழ்ந்தார்கள் என்பதற்கு பல பாடல்கள் சான்று பகர்கின்றன.


"ஆளு கட்டும் நம்ம சீமை
அரிசி போடும் நம்ம சீமை
சோறு போடும் நம்ம சீமை
சொந்தமெண்ணு எண்ணாதிங்க"



புலம் பெயரும் எவரும் தமது தாயகத்தை மறக்க மாட்டார்கள் தங்களது தாயக நினைவுகளை சொல்லும் இவர்கள்...



" ஊரான உரிழந்தேன்
ஒத்தப்பன தோப்பிழந்தேன்
பேரான கண்டியிலே
பெத்த தாய நாமறந்தேன்"



"பாதையிலே வீடிருக்க
பழனிச்சம்பா சோறிருக்க
எரும தயிருரிக்க
ஏனடி வந்த கண்டிசீமை "



என்ற வரிகள் தாயக நினைவுகளை மட்டுமல்லாமல் தாம் வாழ்ந்த வாழ்க்கையும் தமது தாய் மண்ணின் பிடிப்பினையும் கோடிட்டுக் காட்டுகின்றன...


மலையக தொழிலாளர்கள் தாங்கள் தொழில் செய்கின்றபோது பாடப்படுகின்ற பாடல்கள் வேடிக்கையாகவும் நகைசுவை நிறைந்ததாகவும் காணப்படும். இப்பாடல்கள் பெரும்பாலும் தொழிலாளர்கள் தங்களை வேலை வாங்குகின்ற முதலாளிமாரை பற்றிய பாடல்களே அதிகம் என்று சொல்லலாம்.


இருப்பினும் காதல்பாடல்களும் இடம் பெற்று இருக்கிறன. தோட்டப்புறங்களிலே சிங்கள, தமிழ், முஸ்லிம் தொழிலாளர்களிடையே காதல் ஏற்பட்டமைக்கான பதிவுகள் மலையக நாட்டுப்புறப் பாடல்களிலே காணப்படுகின்றன.


தாழ்நிலை, இடைநிலை,பெருந்தோட்டங்களில் சிங்கள-தமிழ் தொழிலாளர்கள் இணைந்து வேலை செய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம். இவர்களிடையே இன ,மொழிமத, சாதிபேதங்களுக்கு அப்பால் தொழிலாளர்கள் என்ற உணர்வின் மேலோக்கங்களே காதல் மலர்வதற்கு காரணமாகலாம்.



சிங்களக்குட்டி அடி செவத்தக்குட்டி ரன்மேனிகே
ஒன்னாலே என் உசிரு என் தங்க ரேத்தினமே
வீணாகப் போகுதடி என் தங்க ரத்தினமே"



எனும் இப்பாடல் இன முரண்பாடுகளுக்கு அப்பால் மலர்ந்த காதலுக்கு ஆவணமாகின்றது.


எனும் இப்பாடல் இன முரண்பாடுகளுக்கு அப்பால் மலர்ந்த காதலுக்கு ஆவணமாகின்றது.


"அப்பு குசினி மெட்டி
ஆயம்மா சிங்களத்தி
வான்கோழி ரெண்டு காணோம்
வாங்க மச்சான் தேடிப்போகலாம்"


"சிங்களவா சிங்களவா
தவறண சிங்களவா
நாலு பணத்துக்கு
நீ கொடுத்த சாராயம்
ஆள மயக்குது
அல்லோல கல்லோல"என்ற பாடல்களோடு



"அப்பத்தோடு சுட்டுவச்சு
அது நடுவே மருந்து வச்சு
கோப்பி பிடிக்கச் சொல்லி
கொல்லுறாளே சிங்களத்தி"


போன்ற பாடல்களும் மலையக சூழலில் இன முரண்பாடுகளை எடுத்துக்காட்டும் பாடல்களாகும் பாடல்களாகும்
read more...

a